Wednesday, December 24, 2008

காந்தி மகாத்மா ஆனது எப்படி?

காந்திஜி ஒருவிரலை அசைத்தால் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே அந்த திசையில் அடிபணிந்தது. அவர் சொன்னார் என்பதற்காக அடிஉதைகள் வாங்கியது. மாசக்கணக்கில், வருஷக்கணக்கில் கம்பி எண்ணியது.
காந்தி ஆங்கிலத்திரைப் படத்தில் ஒரு காட்சி வரும். காந்தி சிறையிலிருப்பார். போராட்டத்தை அபுல்கலாம் ஆஸாத் தலைமை ஏற்று நடத்திச் செல்வார். அப்போது மக்களை அழைத்து அவர் சொல்வார், “They want us to fight back or lose heart. We will do neither”. அழகான வசனம். காந்தியத்திற்கு ஒரு அருமையான உதாரணம்.
எப்படி அந்த மனிதருக்கு மட்டும் அவ்வளவு சக்தி வந்தது? எங்கிருந்து? சும்மா யாரையாவது கூப்பிட்டு ‘மகாத்மா’ என்று பட்டம் கொடுத்துவிட்டால் அந்த சக்தி வந்துவிடுமா?இந்த கேள்விக்கு பதிலைத் கடைசியில் மகாத்மாதான் சொன்னார். பூடகமாக. அவரின் சுய சரிதை மூலமாக.
ஒருசில தடவைகள் வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக மட்டனையும் அது கலந்த உணவையும் நண்பனின் சிபாரிசின் பேரில் மகாத்மா சாப்பிட்டுள்ளார். கெட்ட சகவாசம். ஆனால் அவர் சாப்பிட்டதற்கான காரணம் இருக்கிறதே அதுதான் ஒரு மகாத்மாவை அடையாளம் காட்டுவதாக உள்ளது. Mahatma in the making!
அந்தக் காரணம் என்ன தெரியுமா? மட்டன் ரொம்ப சுவையானது என்பதல்ல.(இது நாம் சாப்பிடுவதற்கான காரணம்). ஒழுங்காக சமைத்த மட்டன் சுவையாக இருக்கும் என்ற விஷயம்கூட பாவம் அவருக்குத் தெரியாது! பின் ஏன் சாப்பிட்டார்?
மாமிசம் சாப்பிட்டால் பலம் வருமாம். எப்போதும் அதைச் சாப்பிடுகிற ஒரு பலசாலியான நண்பன் சொன்னது. இந்தியர்கள் காந்தி மாதிரி நோஞ்சானாக இருந்ததற்குக் காரணம் பெரும்பாலும் அவர்கள் காய்கறி சாப்பிடுபவர்களாக இருந்ததுதான். வெள்ளைக்காரர்கள் வலிமையுடன் இருந்ததற்குக் காரணம் அவர்கள் மாமிச உணவு உண்டதுதான். எனவே அவர்களை இந்திய நாட்டைவிட்டு வெளியேற்றி வெற்றி கொள்ள ஒரே வழி எல்லா இந்தியர்களும் மாமிசம் புசித்து பலசாலி ஆவதுதான் என்று ரொம்ப சத்தியமாக மகாத்மா நினைத்தார்! இது அவர் பள்ளிப்பருவ சிந்தனை! பின்னாளில் அவர் ‘திருந்தி’ சைவத்துக்கு மாறியது தெரிந்ததே.
இங்கே நாம் அடிக்கோடிட வேண்டியதெல்லாம் சைவ உணவு பலம் தரக்கூடியதா அல்லது அசைவ உணவா என்பதற்கான பதிலை அல்ல. ஒரு பள்ளிச் சிறுவன் தன் உணவுப் பழக்கங்களை நாட்டு நலன் கருதி மாற்றிக்கொண்டிருந்திருக்கிறான் என்பதையே!




கருத்தாக்கம்:நாகூர் ரூமி
http://www.nagorerumi.com/?cat=7&paged=6




Saturday, December 13, 2008

ஒரு அபாயகரமான உண்மை(எமன் எங்கேயும் ஒளிந்திருக்கலாம்.)




சமீபத்தில் மின்னஞ்சல் ஒன்றில் வந்த செய்தி இது.....

அமெரிக்காவில் வடக்கு டெக்ஸாஸில் ஒரு பெண்மணி ஒரு படகுப்பயணத்தின் போது அருந்துவதற்காக கோக் டின்களுடன் படகில் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் நடுவே மயங்கிய நிலையில் திங்களன்று மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதனன்று மரணமடைந்தார்.



பிரேத பரிசோதனை பெண்மனிக்கு ”லெப்டோஸ்பரஸிசஸ்” எனும் நோயினால் இறப்பு நேர்ந்திருப்பதாக கூறியது.தொடர் விசாரணையில் அந்த பெண் அருந்திய கோக் பான டின் மூலம் நோய் ஏற்பட்டிருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது.கோக் டின்னின் மூடியின் மேல் இருந்த காய்ந்து போன எலியின் சிறுநீரே இந்த நோய்க்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.எலிகளின் சிறுநீரில் மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமான தொற்றுநோய் கிருமிகள் உள்ளது.



எனவே இந்த மாதிரி குளிர்பானங்களை டின்கள் மூலமாக அருந்தும் முன் மேல் மூடியை நன்றாக கழுவிய பின்னரே அருந்த வேண்டும்.குளிர்பான டின்களை கிடங்குகளில் சேகரித்து வைக்கும்போது கூட அவை எலிகள் மூலம் பாதிக்கப்படலாம்.கடைகளில் வினியோகம் செய்யப்படும்போதும் அவை சுத்தம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியே..



சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த சோடா டின் மேல்மூடிகள் பொது கழிப்பறையை விட கிருமிகளாலும்,பாக்டீரியாக்களாலும் தாக்கப்பட்டு அசுத்தம் நிறைந்திருப்பதாக தெரிவிக்கிறது.



எனவே இனி குளிர்பானங்களை குடிக்க வாயருகே கொண்டு செல்லுமுன் நன்றாக சுத்தமாக கழுவிவிட்டு அருந்தவும்.எமன் எங்கேயும் ஒளிந்திருக்கலாம்.

Friday, December 5, 2008

சொர்க்கமும் நரகமும்



ஒரு சமயம் குரு நானக் சொர்க்கம் என்றால் என்ன ? நரகம் என்றால் என்ன? என்று அறிய கடவுளை காண சென்றார். குரு நானக் தன் மனதில் எழுந்த கேள்வியை கடவுளிடம் கூறினார்.

இதை கேட்ட கடவுள் மென்மையாக சிரித்துவிட்டு "அதோ தெரிகிறது பார் ஒரு கதவு அதை திறந்து பார் உன்னுடைய கேள்விக்கான விடை கிடைக்கும்" என்று கூறினார்.

குரு நானக் பெயர் ஏதும் எழுதபடாத அந்த கதவை திறந்து பார்த்தார்.

அங்கு ஒரு மேடையின் மீது நிறைய வித்தியாசமான ருசிமிக்க உணவுகளும், அபூர்வ வகை பழங்களும் மற்றும் நிறைய அமுத பானமும் இருந்தன. அந்த மேடையை சுற்றி மனிதர்கள் மிகவும் துன்பத்துடன் இருந்தனர். அவர்கள் கையில் மிக நீண்ட கைப்பிடியுள்ள கரண்டி இருந்தது. அவற்றை கொண்டு அந்த உணவுகளை மனிதர்கள் சாப்பிட துடித்தனர் ஆனால் மிக நீண்ட கரண்டி என்பதால் அவர்களால் உணவுகளை வாயருகே கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர். இந்த காட்சியை கண்ட குரு நானக் அதிர்ச்சி அடைந்தார். இது தான் நரகம் என்று அறிந்தார்.

மீண்டும் கடவுளிடம் சென்று, "நான் உண்மையான நரகத்தை பார்த்துவிட்டேன், சொர்க்கம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும்" என்று சொன்னார்.

கடவுள் அதே கதவை திறந்து பார் என்றார். குரு நானக் மீண்டும் அந்த பெயர் இல்லாத கதவை திறந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை ஆனந்தத்தில் மூழ்கடித்தது.

அங்கும் ஒரு மேடையின் மீது ருசி மிக்க உணவு வகைகளும், அரிய பழ வகைகளும் மற்றும் அமுத பானமும் நரகத்தில் இருந்தது போலவே மிக நீண்ட கைப்பிடியுள்ள கரண்டி தான் இருந்தது. ஆனால் அங்கு மனிதர்கள் ஒருவர் கரண்டியை கொண்டு மற்றவருக்கு ஊட்டி தானும் மற்றவர் கரண்டியால் ஊட்டும் உணவினை உண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். இதை கண்ட குரு நானக் இதுவே சொர்க்கம் என்று மனம் தெளிந்தார்.

பிறகு கடவுளிடம் வந்து, "சொர்க்கம் எது ? நரகம் எது ? என்பதை நான் நன்கு அறிந்து கொண்டேன்" என்றார்.

கடவுள் மிக்க மகிழ்ச்சி என்று சொல்லி "சொர்க்கமும் நரகமும் வாழும் நம் வாழ்கையில் தான் உள்ளது. நரகத்தில் தான் மட்டும் உண்ண வேண்டும் என்று சுயநலத்துடன் நினைப்பதால் அவர்களால் அந்த நீண்ட கரண்டியை கொண்டு உணவை சாப்பிட முடியாமல் துன்பம் அடைகிறார்கள், அதே சொர்க்கத்தில் அந்த நீண்ட கரண்டியை கொண்டு சுயநலம் இன்றி மற்றவர்களுக்கு அந்த கரண்டியை கொண்டு ஊட்டி தானும் அதன் மூலம் பயன் அடைகிறார்கள். இதில் இருந்து நாம் அறியும் உண்மை மற்றவர்களை வாழவைத்து, நாமும் அதன் மூலம் வாழ்வதுதான் உண்மையான சொர்க்கம். இந்த உண்மையின் தத்துவத்தை அனைவருக்கும் நீ எடுத்து கூறுவாயாக", என்று கடவுள் குரு நானக்கிடம் சொன்னார். அதனை குரு நானக் அவர்களும் பின்பற்றி மற்றவர்களுக்கும் எடுத்து சொன்னார்.


ஓம் எனும் மந்திரம்



'ஓம்' என்ற சொல்லே நம் உள்ளம் என்னும் திருக் கோவிலைத் திறக்க உதவும் ஒரே திறவுகோல்.அதற்கு மேல் ஒலிக்கும் ஒவ்வொரு சொல்லும், அந்தத் திருக்கோவிலினாற்றல் வளாகத்தை நமக்கு உணர்த்தும் ஒளிவிளக்குகள்.அதனால்தான், அனைத்து மந்திரங்களும் "ஓம்" என்ற ஒலியுடன் தொடங்குகிறது.

ஓம்.......என்ற ஒலி மூன்று படிகளை உடையது.

அதாவது, அகரம், உகரம், மகரம் என்ற ஒலி நிலைகள்.

பயிற்சியின்போது ஐந்து நிலைகளாக விரியும்.

அகரம் - விழிப்பு நிலை.

உகரம் - கனவு நிலை

மகரம் - உறக்க நிலை

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....என்ற தொடர் ஒலி , கனவற்ற உறக்கத்தை உணர்த்தும் துரிய நிலை.

தொடர் ஒலியின் இறுதில் ஏற்படும் அமைதி. தன் இழந்த சமாதி நிலை.. அதை துரியாதீத நிலை என்போம்.

ஆக , ஐந்து நிலைகள்.


Blogger Templates by Isnaini Dot Com and Archithings. Powered by Blogger