Tuesday, November 25, 2008

மகாபாரதம் - ஒரு மகா காவியம்

எதற்காக இதிகாசங்கள் படிக்கப் பட வேண்டும் ?

நமது புத்தக வாசிப்பு பழக்கம் என்பது ஒரு மணி நேரமோ அல்லது சுவாரஸ்யமாக இருந்தால் சில மணி நேரங்களுக்குள்ளே முடிந்து போய்விடக்கூடியது. இதிகாசங்களோ பல நூறு பக்கங்கள் கொண்டதாக இருக்கின்றன. வாசிக்க நிறைய நாட்கள் தேவைப்படுகின்றன. அத்தோடு அவற்றால் நமக்கு என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது என்ற எண்ணம் உருவாவது இயல்பு தான்.நமது அன்றாட வாசிப்பு குளத்தில் நீந்துவது போன்றது. இதிகாசம் கடலில் நீந்தும் அனுபவம். கடலில் நீந்தும்போது நாம் எல்லையற்ற பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை உணர்வோம். அதே நேரம் நாம் நீந்தும் கடலின் அடியாழத்தில் எத்தனையோ மலைகள் புதையுண்டு இருக்கின்றன. கோடானகோடி உயிர் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது . அப்படி பட்டது தான் இதிகாசங்களை வாசிப்பதும்.
எல்லா இதிகாசங்களும் மக்களின் நினைவு தொகுப்புகளே. ஒட்டுமொத்தமான மனப்பதிவுகளின் ஒரு சேகரம் என்று கூட சொல்லலாம்.

மகாபாரதம் என்னும் மகா காவியம்

இந்திய சமூகத்தின் ஆதிநினைவுகள் இதிகாசங்களில் பதிவாகியிருக்கின்றன. இந்திய மனது கொண்ட எழுச்சியும் தடைகளும் அதில் காணக்கிடைக்கின்றன. அதேநேரம் நமது கதை சொல்லும் மரபின் உச்சபட்ச சாதனையாகவும் அது திகழ்கிறது.
மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சூதர்களால் பாடப்பட்டு தான் இலக்கியவடிவம் பெற்றிருக்கின்றன. சூதர்கள் பாடிய மகாபாரதத்தின் பெயர் ஜெயா. அதாவது வெற்றி. வெற்றியை பாடுகின்ற பாடல். ஆனால் வெற்றியை மட்டும் அது கவனம் கொள்ளவில்லை. இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், நகரங்கள் உருவாக்கபட்டதையும், கானகம் எரிக்கபட்டு வனகுடிகள் துரத்தபட்டதையும், அரசாட்சியில் ஏற்பட்ட உள்குழப்பங்கள். மாற்றங்களையும் சேர்ந்தே விவரிக்கிறது.
மகாபாரதத்தை முழுமையாக ஒரு முறை வாசித்து தெரிந்து கொள்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு தேவைப்படும். நம்மில் பெரும்பாலோர் வாசித்துள்ள மகாபாரதம் மிகவும் சுருக்கப்பட்ட பிரதியாகும். அது தண்ணீரில் பார்க்கும் நிலவின் தோற்றம் எனலாம்.
ஆதிபர்வம், சபா பர்வம், ஆரண்ய பர்வம், விராட பர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், சல்லிய பர்வம், சப்திக பர்வம், ஸ்ரீபர்வம், சாந்தி பர்வம், அனுசாசன பர்வம், அஸ்வமேதிக பர்வம், ஆச்ரமவாச பர்வம், மௌசால பர்வம், மகாபிரதஸ்தானிக பர்வம், சொர்க்கரோக பர்வம். என்று பதினெட்டு பருவங்களாக கிட்டதட்ட பதினைந்தாயிரம் பக்கங்கள் கொண்ட மகாபாரதப் பிரதி ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே தமிழில் வெளியாகியிருக்கிறது.
பொதுவில் இதிகாசங்களை நேரடியாக நாமே வாசிப்பதை விடவும் ஒருவர் வாசித்து பொருள் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்வது எளிய வழி. அதன் பிறகு நாமாக படிக்க துவங்கலாம். ஆனால் இதற்கு ஒரு ஆசான் தேவை. அவர் இதிகாசத்தில் ஊறித்திளைத்தவராக இருத்தல் வேண்டும். அப்படி மகாபாரத்தில் ஊறித்திளைத்தவர்கள் நூற்றுக்கணக்கில் இந்தியாவில் இருக்கிறார்கள். மகாபாரதத்தை மட்டுமே ஆய்வு செய்வதற்கு பூனாவில் தனியான ஆய்வு நிறுவனமே இருக்கிறது.இந்தியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மகாபாரதம் அங்கே தான் நடைபெற்றது என்ற நம்பிக்கையும் சில நினைவிடங்களும் உள்ளன.

இதிகாசங்களை வாசிப்பது எப்படி? -

இதிகாசங்களை வாசிப்பது தனியானதொரு அனுபவம். ஒரு நாவல்,சிறுகதை, கவிதைப் புத்தகம் வாசிப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக்கூடியது. பொதுவில் இதிகாசங்களை வாசிப்பது எளிதானதில்லை. அதற்கு வாசிக்கும் ஆர்வத்தை தாண்டிய சில அடிப்படைகள் தேவைப்படுகின்றன.

அந்த அடிப்படைகளில் பத்து விஷயங்கள் மிக முக்கியமானது

1) இதிகாசத்தை ஒரே மூச்சில் வாசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட வேண்டும். பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம்.

2) எந்த தேசத்தின் இதிகாசமாக இருந்தாலும் அதை வாசிப்பதற்கு மூலப்பிரதியைத் தவிர அதோடு தொடர்புள்ள புராணீகம். வரலாறு, பண்டைய சமூக, கலாச்சார வாழ்வு குறித்த அடிப்படைகள், மற்றும் மொழி நுட்பம், குறீயிட்டு பொருள்கள் போன்றவற்றை புரிந்து கொள்வது அவசியம்

3) இதிகாசத்தில் வெளிப்படும் அறம் மற்றும் நீதி கருத்துகள், தத்துவ விசாரம் குறித்து எளிய அறிமுகமாவது அவசியம் அறிந்திருக்க வேண்டும். அத்தோடு அதை இன்றைய கண்ணோட்டத்திலிருந்து விமர்சிக்கும், கண்டிக்கும் மனநிலையை சற்றே ஒதுக்கி வைத்துவிட வேண்டும்

4) இதிகாசங்கள் தன்னளவில் இயல்பும் அதீதமும் ஒன்று கலந்தவை. கடவுளும் மனிதனும் ஒன்று சேர்ந்து இயங்கும் வெளியது. அதில் எது இயல்பு எது அதீதம் என்று பிரித்தெறிவது சுலபமானதில்லை. இயல்பு, அதீதம் என்பது பற்றி இன்றுள்ள நமது அறிவும் புரிதலும் இதிகாசங்களை வாசிக்கையில் நிறைய மனத்தடைகளை உருவாக்ககூடும். ஆகவே அதையும் சற்றே விலக்கி விட்டு வாசிக்கத் துவங்க வேண்டும்

5) நாவல் போல சிறுகதை போல கதை சொல்லும் முறை ஒன்றிரண்டு மையங்களுக்குள்ளோ, முக்கியமான ஒற்றை சரடிலோ இதிகாசத்தில் இயங்குவதில்லை. ஆகவே பன்முகப்பட்ட கதையிழைகளும், சிறியதும் பெரியதுமான நிறைய கதாபாத்திரங்களும், முன்பின்னாக நகரும் நிகழ்வுகளும், குறியீடுகளும் சங்கேதங்களும், தத்துவ விசாரணைகளும், கவித்துவ உச்சநிலைகளும், அக தரிசனங்களும் உள்ளடக்கியது என்பதால் அவற்றை உள்வாங்கவும் நமக்குள் தொகுத்துக் கொள்ளவும் ஆழ்ந்த கவனம் தேவைபடுகிறது

6) இதிகாசத்தின் கட்டமைப்பு மிக முக்கியமானது. அதன் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையானது. அதே நேரம் ஒன்று சேரும் போது விரிந்த அனுபவம் தரக்கூடியது. ஆகவே அந்தக் கட்டமைப்பின் ஆதாரப்புள்ளியை அறிந்து கொள்வது அவசியமானது. இதிகாசம் ஒரு பிரம்மாண்டமான பேராலயம் போன்ற தோன்றம் கொண்டது. அதற்கு நிறைய உள்அடுக்குள், ரகசிய வழிகள், சாளரங்கள் இருக்கின்றன. அதே நேரம் இந்த கட்டமைப்பு பெரிதும் மாயத்தன்மை கொண்டது என்பதால் எது நிஜம் எது பிம்பம் என்று கண்டறிவதில் குழப்பம் ஏற்படக்கூடும். ஆகவே இதிகாசம் துவங்கும் இடத்தில் கதை துவங்குவதில்லை. இதிகாசம் முடியும் இடத்தில் கதை முடிந்துவிடுவதில்லை.

7) இதிகாசம் கவிதையின் உச்சநிலை. ஆகவே உன்னதமான கவித்துவ எழுச்சியும் உத்வேகமும் அதிகம் காணமுடியும். கதாபாத்திரங்களின் உணர்ச்சிநிலைகளையே இதிகாசம் முக்கியம் கொள்கிறது. அதிலும் இயற்கையும் கதாபாத்திரங்களின் மனநிலைகளும் பிரிக்க முடியாதவை. ஆகவே இயற்கையை பற்றிய விவரிப்புகள் மிக முக்கியமானவை.

8) இதிகாசத்தின் பின்னால் இயங்குவது ஒரு நாடோடி மனம். அது எண்ணிக்கையற்ற பாடல்களால் நிரம்பியது. மனிதர்கள் அறிந்த கதையை அவர்கள் அறியாத வண்ணம் சொல்கிறது. அதன் குரல் புராதனமானது. ஆகவே கதை சொல்பவன் ஆழ்ந்த பெருமூச்சுடன் சில நேரங்களில் கதையை விவரிக்கிறான். சில நேரங்களில் உன்மத்தம் ஏறிக் கதையை சொல்கிறான். சில வேளைகளில் சந்நதம் கண்டவன் போல துள்ளுகிறான். சில தருணங்களில் அவன் குரல் பைத்தியநிலையை எட்டுகிறது. இந்த பன்முகப்பட்ட குரல்கள் தான் இதிகாசத்தின் தனிச்சிறப்பு. அதை நுட்பமாக உணர்ந்து கொள்ள வேண்டும்

9) இதிகாசத்திற்கு உடல் இருக்கிறது. அதன் கண் எது, காது எது, எது இதயம், எது கைகால்கள் என்பதை வாசிப்பின் மூலம் ஒரு தேர்ந்த வாசகன் கண்டுபிடித்துவிட முடியும். இதை தான் பலவருடமாக இதிகாசம் வாசிப்பவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

10) இதிகாசங்கள் மதப்பிரதிகள் அல்ல. அவை மதம், மெய்தேடல், உயர்தத்துவ விசாரணை போன்றவற்றை விவரித்தாலும் அவை ஒரு சமூகத்தின் நினைவு தொகுப்புகள் . இதிகாசம் நிறைய கிளைகள் கொண்டது. அதில் ஒன்று தான் மதம்.
படைப்பு - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=166&page=

Sunday, November 23, 2008

சீனாவில் தமிழ்


சீன நாட்டில் காண்டன் என்னும் நகருக்கு 500 மைல்கள் வடக்கே உள்ள சூவன்செள என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள், இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கி பிறகு வியட்நாம் சென்று அங்கிருந்து, சீன நாட்டை அடைந்துள்ளனர்.தமிழ் நாட்டிலிருந்து நேரடியாக சீனாவிற்குக் கடல் மார்க்கமாகச் செல்ல வேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மலாக்கா வழியாகத் தென் சீனக் கடலை அடையலாம். மலேசிய தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இநதப் பாதை சுற்றுப் பாதையாகும். ஆயிரம் மைல்களுககு அதிகமாகப் பயணதூரம் நீளும். மேலும் பயண நேரத்திலும் பல மாதங்கள் கூடிவிடும்.சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில் - புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐநூற்றுவர் எனும் குழுவினர் சீன நாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சூவன்செள துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சிவவிக்ரகம் குப்லாய்கான் என்னும் புகழ் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப்பட்டதாகும். இவருக்கு சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. இந்த கோயில் திருக்காதலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்காதலீசுவன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார்.சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச் சக்கரவரத்திகள் சம்பந்த பெருமாள் என்பதாகும். சக யுகம் சித்ரா பெளர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது.

கி,பி, 1260 ஆம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலிய சக்கரவர்த்தியான செங்கிஸ்கானின் பேரனாவான். மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.இவன்தான் பீஜிங் நகரை நிர்மாணித்து அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவனுடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான்.புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கினான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சியக் காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புடன் திகழ்ந்தனர. அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இந்நாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீனச் சக்கரவர்த்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டிற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வமான தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்.

நன்றி: - தென் ஆசியச் செய்தி இதழ் - திராவிட ராணி இதழ்

நன்றி: தமிழம்

Friday, November 21, 2008

நமது இந்தியா


* எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.

* பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் பிறந்துவளர்த்த பூமி.

* செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

* கிரானைட்(சலவைக் ஆண்டுகளுக்கு)கல்லால் கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.

* உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.

* உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.

* உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு (கி.மு.700இல்)

* 1896ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

* மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.

* உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.

* உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.

* தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

* உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

* உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.

* வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.

* அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுகிறார் 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை சிகிச்சை,செயற்கை உறுப்பு,எலும்புமுறிவுகள்,சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).

* 5000ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.

* முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப் பின்பற்றுகின்றனர்).

* வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

* உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.

* குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).

* நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.

* காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.

* முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).

* இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு(35 வயதுக்குட்பட்டவர்கள் 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்).

மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு ?

நமது இந்தியாதான்

Thursday, November 20, 2008

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்துக்கள்.


"மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன.

ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது.

இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு? ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது"


"படிப்பறிவு என்பது வேறு. கல்வி அறிவு என்பது வேறு. படிப்பறிவின்போது என்ன செய்கிறோம் என்றால், அடுத்தவர்களின் அறிவை நாம் உள் வாங்குகிறோம். கல்வியறிவு என்பது உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியில் வருவது இரண்டும் நேர் எதிரானது. நம்முடைய நாட்டில் நிறைய படித்து விட்டார்கள். அதனால்தான் அறிவே இல்லை. அறிவு என்பதென்னவென்றால், தொட்டணைத் தூறும் மணற்கேணி. அந்த மணற்கேணியில் தோண்டத் தோண்ட தண்ணீர் வருவது மாதிரி உள்ளிருந்து அறிவு வெளிப்பட வேண்டும்."


"இந்த நாட்டில் இன்னமும் 28 கோடி பேர் பசியோடு தூங்கப் போகிறார்கள். 75 சதவீதம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சோகை’ நோய் இருக்கிறது. இரத்தத்தில் இரும்புச் சத்து இல்லை. 57 சதவீதம் குழந்தைகளுக்கு கண் பார்வை சரியாக இல்லை. வைட்டமின் ‘கி’ பற்றாக் குறையாக இருக்கிறது. இதற்கு என்ன காரணமென்றால், தாய் வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே அந்தக் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கவில்லை. நம்மால் சத்தான உணவைக் கொடுக்க முடியவில்லை. அப்புறம் எதை வைத்து ‘வளர்ந்து விட்டோம். வளர்ந்து விட்டோம்’ என்று சொல்கிறார்கள்? பெரும்பாலான மக்களுக்கு என்ன இல்லையென்று பார்த்தோமேயானால், அவர்களுக்கு என்று தனி சொத்து கிடையாது. அப்போது அவர்கள் பொது ஆதாரத்தை நம்பி இருக்கிறார்கள். அவர்களின் ஆடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. அவர்களின் மாடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. இவர்கள் விறகை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. தண்ணீரை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. அதையெல்லாவற்றையும் தனியாரிடத்தில், ஒரு முதலாளி இடத்தில் ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது வறுமைக் கோட்டிற்கு உள்ளே இருக்கின்ற கோடானுக்கோடி மக்களை அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை விளிம்புக்கு வெளியே இருக்கின்ற மக்கள் என்று சொல்வார்கள். அவர்களை மேலும் சாவை நோக்கித் தள்ளுவதற்குத்தான் இந்தத் திட்டங்கள் எல்லாம் செல்லுபடியாகும்.
ஆக, கிராமங்களில் இருக்கின்ற நிலங்கள் மூன்றே மூன்றிற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒன்று: மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்காதபடி அங்கேயே குளம் வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.
இரண்டு : அங்குள்ள ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களை உண்டு பண்ண பயன்படுத்த வேண்டும்.
மூன்று. : அங்கேயும் காற்று சுத்தமாக, மழை வர, குளிர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காக மரங்களை நட பயன்படுத்த வேண்டும்."


"இந்தியா ஒன்றும் இங்கிலாந்து அல்ல; இங்கிலாந்தில் நான்கு மாதங்கள்தான் வெயில் அடிக்கும். இங்கு 12 மாதமும் வெயில் அடிக்கிறது. ஒருவனிடம் தண்ணீரையும் நிலத்தையும் கொடுத்துவிட்டால் அந்தக் குடும்பம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் வயதானவன் வரை அந்நிலத்தில் வேலை செய்வார்கள். அவ்வளவு ஏன் அவன் கழிக்கும் மலம் ஜலமே செடி கொடிகளை வளர்த்து விடும். அதானே எரு. அவன் வைத்திருக்கும் ஆடு சாணி போடும். மாடு சாணி போடும். ஆட்டு பாலை குழந்தை குடிக்கும். மாடு கொடுக்கும் பால் தயிராகி அவர்களின் சாப்பாட்டிற்கு சேரும். சக்தி தரும் ஒரு முருங்கை மரம் போதும் அவர்களுக்கு. ஒரு பப்பாளி மரம் போதும் அவர்களுக்கு. இவர்களுக்கு நிலமே இல்லாத வேலைகளைத்தான் இந்த வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் செய்கிறது. உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இன்றைக்கு வளர்ச்சித் திட்டம் என்று எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோமே, அதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். போட்டதை அப்படியே போட்டு விட்டுத் திரும்பி நிற்க வேண்டும். எங்கிருந்து நாம் தப்பு செய்தோமோ அந்த இடத்திற்குத் திரும்பிப் போனதற்கு பிற்பாடுதான் வளர்ச்சியைப் பற்றி யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு எங்கு நம்முடைய தப்பு ஆரம்பித்ததென்றால், ‘பசுமைப் புரட்சி’யில்தான் ஆரம்பித்தது. பசுமைப் புரட்சிக்கு முன்னால் என்ன நடந்ததென்றால், நான் என்னுடைய அப்பா நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வயலில் வேலை செய்து விட்டுத்தான் பள்ளிக்கூடம் போக வேண்டும். பதினொன்றாம் வகுப்பு வரையிலும் அப்படித்தான் போனோம். அன்றைக்கு என்னுடைய அப்பா என்ன செய்யவில்லை என்றால் விவசாய உற்பத்திக்காக டவுனிலிருந்து எதையும் வாங்கவில்லை. அவர் டவுனிலிருந்து விவசாயத்திற்காக ஏதாவது வாங்கி இருந்தால் அது: கொழுவடிப்பதற்காக இரும்பு வாங்கி இருக்கிறார். கடப்பாறை வாங்கி இருக்கிறார். அறிவாள் வாங்கி இருக்கிறார். மண்வெட்டி வாங்கி இருக்கிறார். ஆக, இரும்புச் சாமான்கள் மட்டும்தான் வெளியில் வாங்கியது. மற்றபடி எங்கள் வயல்வெயில் இருக்கின்ற இலை தழைகளையே எருவாகப் பயன்படுத்திக் கொண்டோம். வரப்புகளில் இருந்த மரத்தை வைத்தே வீட்டிற்கு கட்டில், ஜன்னல், கதவு, பீரோ, வண்டி என்று சகலத்தையும் செய்து கொண்டோம். உள்ளூர் ஆசாரியார் இவற்றை அழகாக செய்து கொடுத்து விட்டார். நாங்கள் அதற்கு ஈடாக களத்தில் நெல் அடிக்கும் போது அரிசி, சாப்பாடு என்று கொடுத்துவிட்டோம். முடி திருத்தும் தொழிலாளியின் வீட்டுப் பெண்தான் எங்கள் குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்தார். அவருக்கு நெல் கொடுத்தோம். இராத்திரி சாப்பாடு எங்கள் வீட்டிலிருந்து தான் அவர் வீட்டிற்குப் போகும். இப்படித்தான் எல்லோரும் பகிர்ந்துண்டோம்.எங்கள் அப்பா எங்கள் தாத்தா கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தை பத்து ஏக்கராக மாற்றி, அவரது நான்கு மகன்களுக்கும் ஆளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்தார். ஆனால், இன்றைக்கு என்ன நடக்கிறது? இரண்டு ஏக்கர் வைத்திருந்தால் ஒரு ஏக்கரை விற்று பையனை இஞ்ஜினீயரிங் காலேஜுக்கு அனுப்பிவிட்டு இன்னொரு ஏக்கரை விற்று மகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு விவசாயி ஓட்டாண்டியாக தெருவில் நிற்க வேண்டியதுதான். இதற்குக் காரணம் பசுமைப்புரட்சி. அந்தப் பசுமைப்புரட்சி என்பது எல்லாவற்றையும் வெளியில் வாங்கிச் செய்யும் விவசாயமாக மாற்றி விட்டது. கிராமத்தை உறிஞ்சுவது, சுரண்டுவது என்பது பசுமைப்புரட்சியிலிருந்துதான் ஆரம்பமானது"


"விவசாயப் பெண் பள்ளிக்கூடம் போய் இருக்க மாட்டாள். அவள் ஒரு விடுகதை போட்டாள். என்ன விடுகதை போட்டாள். ‘அடி காட்டுல. நடு மாட்டுல. நுனி வீட்டுல.’ அறுக்கும்போது அடியில் இருக்கின்ற கட்டையை காட்டில் விட்டோம். நடுவில் உள்ளது மாட்டிற்குச் சென்று விட்டது. நுனியில் உள்ளது வீட்டிற்கு வந்துவிட்டது. அடிக்கட்டைக்கு விவசாயி காசு செலவழிக்கவில்லை. நடுவில் இருந்த மாட்டிற்கு காசு செலவழிக்கவில்லை. வேண்டாததை மண்ணிற்குக் கொடுத்தார். வேண்டாததை மாட்டிற்குக் கொடுத்தார். பால் வீட்டிற்கு வந்தது. சாணி மண்ணிற்குப் போய்விட்டது. பயிர் விளைந்து கொண்டே இருந்தது. அப்போது விளைந்தது வீட்டில் இருந்தது. நீங்கள் கடனை வாங்கி, கடனுக்கு யூரியாவையும், டிஏபியையும் போட்டதால் நிறைய விளைந்திருக்கிறது. ஆனால், விவசாயி கையில் ஒன்றுமில்லை. ஏனென்றால் விளைந்ததை விற்று கடன் அடைத்திருக்கிறார். இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள 112 கோடி பேர்களில் 65 சதவீதம்பேர், அதாவது 73 கோடி பேர் கிராமத்தில்தான் உள்ளோம். இந்த 73 கோடி பேர்களை கிராமத்தில் பட்டினி போட்டுவிட்டு அப்புறம் என்ன நீங்கள் விளைய வைக்கவில்லை.. விளைய வைக்கவில்லை என்று வாயாடுகிறீர்கள். இங்கே எல்லோருக்கும் எங்கே சாப்பாடு போட்டீர்கள்.?"


"இந்த ரசாயனப் பொருட்களை நிலத்தில் போட்டதால் நிலம் உப்பாகப் போய் இனிமே ஒரு தானியம் கூட இருக்க முடியாது. இதை ஆரம்பித்ததே மிகவும் வளமான பகுதிகளில்தான் ஆரம்பித்தார்கள். இந்தியா முழுவதும் எங்கெல்லாம் ஆறுகள் நிறைய பாய்கின்றதோ அங்கே ஆரம்பித்தார்கள். வடக்கே ஒரு பஞ்சாப் இருக்கிறது. அங்கே ஐந்து ஆறு பாய்கிறது. அங்கே ஆரம்பித்தார்கள். இங்கே தென்னிந்தியாவில் ஒரு பஞ்சாப் இருக்கிறது. (பஞ்சாப் என்றால் ஐந்து ஆறுகள் என்று பொருள்) இங்கும் ஐந்து ஆறுகள் பாய்கிறது. அதுதான் திருவையாறு. நம்முடைய காவிரி வட்டம் முழுவதும் இதைப் புகுத்தினார்கள். எங்கெல்லாம் ஆறு பாய்ந்து செழிப்பாக இருந்ததோ அங்குதானே பசுமைப் புரட்சியை புகுத்தினீர்கள்? அங்கெல்லாம் இன்று ஒன்றும் விளையாத கட்டத்திற்குப் போய் விட்டது பூமி. அன்றைக்கு இதுதான் ஒரே வழி என்று சொன்னீர்களே? இது எப்படி சரியான வழியாகும்? அப்போது ஒவ்வொரு நாளுக்காகவும் ஒவ்வொரு திட்டத்தையா போடுவீர்கள்? இன்றைக்கு என்ன சொல்கிறார்கள். நிலைத்த, நீடித்த, வேளாண்மை என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்னவென்றால், இன்றைய தேவைக்காக நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் அது நாளைய தேவையைக் கெடுத்துவிடக் கூடாது. அதற்கு பெயர் தான் sustainable டெவலப்மெண்ட். அந்த சஸ்டைனபுலிட்டியை இப்போது இழந்து விட்டு நிற்கிறோம். ஆக, அன்றைக்கு அதைச் சரி என்று சொன்னது நியாயம்தானே என்றால், அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் கிடையாது.அன்றைக்கு அமெரிக்காக்காரன் சொன்னதைப்போல சொன்னீர்கள். அதில் அமெரிக்காக்காரனுக்கு லாபம் இருக்கிறது. வட்டிக்குக் கொடுத்திருக்கிறான். அதற்காக உங்களிடமிருந்து வட்டி வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய ரசாயணப் பொருட்களையெல்லாம் நம்மிடம் விற்றிருக்கிறான். நம்முடைய பூமியை நாசமாக்கி இருக்கிறான். நம்முடைய நுகர்வோரை விஷமாக்கி இருக்கிறான். நுகர்வோர் என்றால் 112 கோடியும் நுகர்வோர்தான். மண்ணைக் கெடுத்திருக்கிறான். விவசாயியை பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தி ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேர் கடந்த ஒரு பத்து வருடங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை இவ்வளவு பெரிய விவசாயிகள் தற்கொலை உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் நடந்திருக்க முடியாது. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விவசாயிகள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு தோற்றுவாய் பசுமைப்புரட்சியிலிருந்து தொடங்குகிறது.வெள்ளையன் ஒரு இருநூறு ஆண்டுகள் நம்முடைய நாட்டை ஆண்டான். அவன் என்ன செய்தான் ஷமீன்தாரை நியமித்து விவசாயிகளிடமிருந்து நிலத்தையெல்லாம் புடுங்கிவிட்டான். தூக்கி ஷமீன்தார் கையில் கொடுத்துவிட்டான். அப்போது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தும் காந்தி காலத்திலிருந்தும் சுதந்திரம் வந்தால் நிலத்தை விவசாயிகளின் கையில் ஒப்படைப்போம் என்றார்கள். அதைச் செய்யவில்லை. ஆகையினாலே தான் பற்றாக்குறை. இன்றைக்கு வரை அந்த உண்மையை மூடி வைத்துக் கொண்டு பற்றாக்குறையால்தான் ‘பசுமைப் புரட்சி’யைக் கொண்டு வந்தோம் என்கிறார்கள். வரலாற்றையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. வரலாற்றையும், விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றால் நம் முன்னேற்றத்திற்கான எந்த வெளிச்சமும் நமக்குக் கிடைக்காது."


"நம்முடைய கரிகாலச்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கல்லணையைக் கட்டியதாகச் சொல்கிறார்கள். இங்கிலாந்துகாரன் இங்கு வந்து கல்லணையைப் பார்த்தபோது அவனுடைய தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தினானாம். ஏனென்றால், எப்படிடா தண்ணீர் பாயும் மணல் ஆற்றில் அணையைக் கட்டி இருப்பான் என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஆகவே அப்படி மரியாதை செய்திருக்கிறான். காட்டாற்றில் தண்ணீர் போய்க் கொண்டே இருக்கும். ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்படுகின்ற வேலையுமல்ல இது என்று மலைத்திருக்கிறான். ‘‘இந்த அணையைக் கட்டுவதற்காக இங்கு முதல் கல்லைப் போட்டானே அந்த மனிதனுக்கு என்னுடைய வணக்கம்’’ என்று அவன் சொன்னதாக வரலாற்றில் எழுதி இருக்கிறார்கள். ஆக, அந்தச் சாதனை மிக்க அணையை கரிகாலச் சோழன் கட்டி இருக்கிறான். அணையென்றால் நீரைத் தேக்கி வைத்து பிறகு தண்ணீரைத் திறந்து விடும் அணையல்ல; கொள்ளிடத்திற்கு அதிகமாகச் சொல்லும் தண்ணீரை அணையிட்டு தடுத்துவிட்டோம் என்றால், அதில் குறிப்பிட்ட அளவிற்கான தண்ணீர் காவிரி ஆற்றில் போய்க் கொண்டே இருக்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் காவிரி அக்கரை தாங்காது. ஆகவே இதைக் கட்டி இருக்கிறான். அதற்கப்புறம் ஒரு விஷயம், பெரிய மன்னர்களை ஒளவையார் பாடவே இல்லை. கரிகாலனை மட்டும்தான் பாடி இருக்கிறாள். பாடும் போது என்ன சொல்கிறாள் என்றால், ‘‘காடு கொன்று நாடாக்கினான். குளம் தொட்டு வளம் பெருக்கினான்’’ என்று எழுதுகிறாள். சரி தானே?ஆக, காவிரி மண்டலத்திலும் நிறைய குளங்களாகவே வெட்டி வைத்திருந்திருக்கிறார்கள். ஏனென்றால், காவிரியில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டும்தான் தண்ணீர் வரும். அதற்காக எங்குப் பார்த்தாலும் குளங்கள் வெட்டினார்கள். தேக்கிய நீரை வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இன்றைக்கு ஆற்று ஓரத்தில் தொழிற்சாலைகளை உண்டாக்கி வைத்துக் கொண்டு ஆற்று நீர் முழுவதையும் சாக்கடையாக்கி வைத்திருக்கிறோம். உடனடியாக நாம் செய்தாக வேண்டிய வேலை. ஆற்று ஓரங்களில் உள்ள எல்லா தொழிற்சாலைகளையும் பூட்டுப் போட்டு பூட்ட வேண்டியதுதான்"


"காந்தியே சொல்லி இருக்கிறார். ‘இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஆறு லட்சம் கிராமங்கள் வாழ்ந்தால் இந்தியா வாழ்கின்றதென்று அர்த்தம். இல்லையென்றால் இல்லை’ என்றார். அப்போது இந்த ஆறு லட்ச கிராமத்தினையும் வளர விடாமல் செய்து பட்டணத்தை மட்டும் ஊதி ஊதிப் பெருக்கி இருக்கின்றோம். பட்டணமும் இன்றைக்கு நன்றாக இல்லை. எவ்வளவு நகரமாக இருந்தாலும் ஒரு சிலர் வரைதான் தாங்கும். அப்போது பட்டிக்காட்டை வறட்சியில் தொடரவிட்டு விட்டோம் என்றால், எல்லா மக்களும் சாப்பாட்டிற்காக நகரத்தில் வந்து மோதுகிறார்கள். வேலை வாய்ப்பில்லை. வீட்டு வசதியில்லை. குடிப்பதற்கு நீர் இல்லை. மருத்துவ வசதி இல்லை. குழந்தைகளுக்கு பள்ளி வசதி இல்லை. மறுபடியும் என்ன செய்திருக்கிறார்கள். கிராமத்திலிருந்த சேரிகளுக்குப் பதிலாக பட்டணத்துச் சேரிகளை உண்டு பண்ணி இருக்கிறார்கள். ஆகவே மறுபடியும் இந்த ஆறுலட்சம் கிராமத்தினையும் வாழக் கூடிய பூமியாக மாற்றினோம் என்றால், பட்டணத்தில் ஏகப்பட்ட மக்கள் நெரிசலை கிராமத்திற்குத் தள்ளிவிடலாம். அப்போது பட்டணத்தில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இவர்கள் உற்பத்தி செய்வார்கள்."


"வரலாற்றில் இரண்டு பெரிய தவறுகள் நடந்திருப்பதாக கனடா நாட்டு விஞ்ஞானி சுட்டிக் காட்டுகிறார். ஒன்று : 1938_39 DDT என்று ஒரு விஜத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்த DDT விஷத்தை கிணற்றில், ஆற்றில் கலந்து விட்டால் எதிரிகள் நம்மீது படையெடுத்து வரும்போது அந்த தண்ணீரைப் பருகிவிட்டு இறந்து விடுவார்கள். அல்லது குடிக்க முடியாமல் திரும்பி விடுவார்கள். அந்த விஜத்தைக் கண்டுபிடித்து உயிரியைக் கொலை செய்யுமா என்று தெரிந்து கொள்வதற்காக பூச்சியின் மீது தெளித்தான். பூச்சி செத்து விட்டது. ஆனால் 1945_ல் போர் முழுக்க நின்று போய் விட்டது. உடனே இதை பூச்சி மருந்து என்று சொல்லி உலகம் முழுவதும் பரப்பினார்கள். ஆனால் தயாரித்தது எதற்கு? ஆட்களைக் கொல்வதற்கு. இந்த விஜத்தைக் கண்டுபிடித்தவன் பெயர் Paul Muller. இந்த Paul Muller 1948_ல் நோபல் பரிசையே கொடுத்தார்கள். மனித மேம்பாட்டிற்காக பாடுபட்ட விஞ்ஞானி என்று சொல்லி விருதைக் கொடுத்தார்கள். 1960_61_ல் என்ன தெரிய வந்ததென்றால், அந்த மருந்து மனிதனையெல்லாம் கொல்கிறது என்று தெரிய வருகிறது.அமெரிக்காவில் உள்ள மரத்தின் மீது வண்டுகள் இருக்கிறது என்பதற்காக ஹெலிகாப்டரில் கொண்டு சென்று மரத்தின் மீது இந்த மருந்தை தெளித்தார்கள். அந்த மரத்தின் இலை பட்டு கீழே விழுந்ததை தின்று மண்ணில் இருந்த மண்புழு செத்து விட்டது. செத்த மண்புழுவைத் தின்ற பறவை செத்துப் போனது. ‘ராபின்’ என்ற ஒரு பறவை அங்கிருந்தது. அது என்ன செய்யுமென்றால் பனிகாலம் வரும் போது நாட்டை விட்டு வெளியில்போய் விடும். வசந்த காலம் வரும் போது சத்தம் போட்டுக் கொண்டு நாட்டிற்குள் திரும்பும். ஆக, வசந்தம் வரப்போகிறது என்று ‘கட்டியம்’ கூறக் கூடிய பறவை அது. இப்போது அந்தப் பறவையையே அங்கு காணோம். இதையெல்லாம் பார்த்து விட்டு கடல் விஞ்ஞானி ராச்சேல் கார்சன் என்பவள் ஒரு புத்தகத்தை எழுதினாள். எழுதிய அடுத்த வருடமே அவள் கேன்சர் நோயினால் இறந்து போனாள். DDT என்ன செய்யுமென்றால், நம்முடைய உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி விந்து சுரப்பதையே நிறுத்தி விடும். உள்ளுக்குள்ளே புற்று நோயை வளர்க்கும். அந்தப் புத்தகத்தைப் படித்த அந்நாட்டு மக்கள் அபாயத்தை உணர்ந்து பின் போராடி அதைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களின் தேசிய பறவை வழுக்கை தலை கழுகு காணாமல் போய்விட்டது. ஹெலிகாப்டரில் தெளிக்கும் மருந்து மரத்தின் மீது மட்டுமே விழாது. அது பக்கத்தில் இருக்கும் ஆறு, ஏரிகளின் மீதும் விழும். அப்படி விழுந்து நீரில் கலந்த அந்நீரைப் பருகிய மீன்கள் நோய்வாய் பட்டு மெதுவாக நீந்தின. அதை சுலபமாக வேட்டையாடி உண்ட கழுகுகள் இறந்து போயின. இவ்வளவு பெரிய தீங்கை கண்டுபிடித்த விஞ்ஞானிக்குத்தான் நாம் நோபல் பரிசை கொடுத்திருக்கிறோம். அதே போல குளோரோ ஃபுளோரோ கார்பன் வாயுவைக் கண்டுபிடித்தவனுக்கு பரிசு கொடுத்தார்கள். இதைத் தான் ஏர் கண்டிஷனில் எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாயுதான் ஓசோன் மண்டலத்தை ஓட்டை போடுகிறது. இந்த வாயு காற்றை விட லேசானது. அதனால் அது ஓசோன் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகிறது. ஓசோன் என்றால் என்ன அர்த்தம்? ஆக்ஸிஷன் அடர்த்தியாக இருக்கிறதென்று அர்த்தம். ‘ஓ’ என்றால் ஆக்ஸிஜன். பொதுவாக ‘ஓ’ என்பது இரண்டாக (O2) இருக்கும் இதில் ‘ஓ’ மூன்று அனுவாக இருக்கிறது. இந்த வாயு ஓசோனின் காற்றுத் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகும் போது குளோரின் தனியாகப் பிரிந்து விடுகிறது. பிரிந்ததும் கனமாகி கீழே இறங்குகிறது. அப்போது ஓசோனை ஓட்டை போடுகிறது. இதனால் என்ன நடக்கிறது. சூரியக் கதிர்கள் வடிக்கப்படாமல் கீழே இறங்குகின்றன. அதனால் நமது தோலில் புற்றுநோய் உண்டாகிறது. ஆக, விஞ்ஞானம் என்றாலே முன்னேற்றமானது என்று நினைப்பவனை விட முட்டாள் வேறு ஒருவன் இருக்க மாட்டான். முன்னேற்றமாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அதான் சரி."


Sunday, November 16, 2008

கடல் கடந்த `இந்து' சாம்ராஜ்யம்!

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை `இந்து" சாம்ராஜ்யம் காபூலில்இருந்து சிங்கபுரம் (தற்கால சிங்கப்பூர்) பரவியிருந்தது. பிற மதங்களின்படையெடுப்புகளினால் இந்து மதம் அழிக்கப்பட்டு, பெரும்பான்மையான மக்கள்வன்முறைகளினால் மதமாற்றம் செய்யப்பட்டனர். பர்மா, இந்தோனேஷியா,பிலிப்பைன்ஸ், கம்போடியா, தாய்லாந்து போன்ற கிழக்காசிய இந்துசாம்ராஜ்யத்தின் பகுதிகள் முகமதியர்களாலும், கிறிஸ்தவர்களாலும்மதமாற்றங்களின் மூலம் பங்கு போட்டுக் கொள்ளப்பட்டன.
இருப்பினும், இம்மக்கள் தங்களுடைய இந்துமத பழக்க வழக்கங்கள், பெயர்கள்ஆகியவற்றை விட்டுவிடவில்லை. முக்கியமாக, மதம் மாறிய இவர்கள், இந்து மதத்தைவெறுக்கவில்லை. இன்றும் ஸ்ரீமத் ராமாயணம் மற்ற மதத்தினரால்மதிக்கப்பட்டும், மரியாதையுடனும் போற்றப்பட்டு வருவதை இந்நாடுகளில்காணலாம். இன்றும் ஸ்ரீமத் ராமாயணம், நாட்டிய நாடகங்களாக இந்நாடுகளில்பிரபலமாக உள்ளன.

இந்தோனேஷியாவின் ரூபாய் நோட்டுகளில் வினை தீர்க்கும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும்காணலாம்.





புகழ்பெற்ற இந்தோனேஷிய முன்னாள் ஜனாதிபதியின் பெயர்மகாபாரதத்தின் மாவீரனான கர்ணனின் பெயர்தான். அவர் பெயர் சுகார்ணோ. அவரதுபெண்ணின் பெயர் மேகவதி.
இதற்கு மாறாக இந்தியாவில்தான் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும்இந்துகளுடன் இணைந்து வாழாமல், தனிப்பிரிவுகளாகவே இருந்து வருகின்றனர்.மேலும், மேலும் மிகப்பெரிய அளவில் மதமாற்றங்களும் செய்து வருகின்றனர்.இதனை அரசாங்கமும், பல அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துவருகின்றன. இந்தியாவில் மட்டும்தான் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வோர் ஊரிலும்`சென்சிடிவ்' ஏரியா முஸ்லிம்கள் பகுதி, கிறிஸ்தவர்கள் பகுதி, இந்துக்கள்பகுதி என்று பிரிந்தே இருக்கின்றன. இது எந்த அளவிற்கு நாட்டின் நலனையும்பாதிக்கும் என்பது பகைவர்களால் நாட்டிற்கு ஆபத்து வரும்போது தெரியும்.பாரதம் அழிந்தால் எவர்தான் வாழ்வார்கள்? நாம் அனைவரும் பாரதத் தாயின்மக்கள். மதம் என்பது சொந்த விவகாரம். மக்களைப் பிரிப்பதற்கு மதம் ஒருகாரணமாக இருக்கக்கூடாது. நல்லபடி வாழ வேண்டும் என்றால் நாம் அனைவரும்இணைந்து வாழ வேண்டும். ``எனது மதம்தான் மதம்'' என்று கூறும் ஆணவம் இனிகூடாது. அவரவர்கள் விருப்பப்படி ஆண்டவனை வணங்கட்டும்.
இந்தியாவில் வாழ்ந்து, இந்தியாவின் நீரைப் பருகி, இந்தியாவின் உணவைஉண்டு பாரத்தாயின் கருணையில் குடும்பத்தையும், குழந்தைகைளயும்வளர்த்துக்கொண்டு, தாய்நாட்டிற்கு ஊறு விளைவிக்கும் அன்னிய நாடுகளிடம்பற்று வைப்பதை எவ்விதம் இறைவன் பொறுப்பான்?`சிறுபான்மையினர்'என்று அரசியல் கட்சித் தலைவர்களால் முத்திரையிடப்பட்டுள்ள முஸ்லிம்களும்,கிறிஸ்தவர்களும் எத்தனை காலத்திற்குத்தான் ராணுவம், காவல்துறை ஆகியவற்றைநம்பி வாழவேண்டும்? பாரதத் தாயின் குழந்தைகளான இவர்கள் ஏன் இந்துக்களுடன்இணைந்து உடன்பிறந்தவர்களாக வாழக்கூடாது? இவர்கள் மூதாதையர்கள் அனைவரும்இந்துக்களாகப் பிறந்து, இந்துக்களாக வாழ்ந்து, இந்துக்களாகவேமடிந்தவர்கள்தான்! இதனை எவரும் மறந்துவிடக்கூடாது!


நன்றி : ஏ.எம்.ஆர். http://www.veeran.co.cc/

Friday, November 14, 2008

இன்னொரு மகாத்மா?



படித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.`உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!' என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?

முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.

பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக் கும் இந்த லட்சிய மனிதரை குமுதம் வார இதழின் சார்பில் பேட்டி எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது

.வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.அப்புறம் பள்ளிக்கூடம்.
கல்விக்கூடத்தை இயந்திரம யமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.

இவரைப் போல மனிதர்களால்தான் இன்னும் நம் பாரதம் உயிர்ப்புடன் இருக்கிறது. உன் போன்ற இளைஞனைத்தான் சுவாமி விவேகாநந்தர் தேடினார்.
செந்தில்குமார் நலமுடன் வாழ அருள் செய் பராசக்தி....
நன்றி: குமுதம் வார இதழ்.

Saturday, November 1, 2008

போலி மத சார்பின்மையின் தொடக்கம்

இதுதான் இன்றைய இந்தியாவை ஆட்டிப் படைக்கும் போலி மத சார்பின்மைக்கு வழிகாட்டியோ?



Blogger Templates by Isnaini Dot Com and Archithings. Powered by Blogger